என்னைப் பற்றி ...

My photo
இலக்கிய வானில் இன்னும் ஒரு தாரகையாய் நான் மின்னாவிட்டாலும் சோம்பேறி மேகமாகவாவது சற்று நேரம் சுற்றி விட்டுப் போகின்றேனே! ('ப்ரிய ஸகி’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

வாங்க! வாங்க!

அடிக்கடி இந்தப் பக்கம் வாங்க! ரொம்ப நாளாச்சு பார்த்து!

Thursday, January 27, 2011

என்று வரும் நமக்குக் கொஞ்சமாவது சொரணை?

நமக்கு ஏன் சொரணையே இல்லை ?

கொஞ்சம் என் பால்ய காலத்திலிருந்து இதை ஆரம்பிப்போம்.

மயிலாடுதுறை அருகில் உள்ள நல்லத்துக்குடியில் என் சிறுவயது கிராம நண்பர்களில் பலரும் அசைவ உணவு, குறிப்பாக மீன் சாப்பிட்டவர்களே. பிராமண சூழ்நிலையில் நான் வளர்ந்ததால் எனக்கு இது மிகுந்த ஆச்சரியம் தரும், பல நேரங்களில் குமட்டலையும் தந்த ஒரு விஷயமே ஆனாலும், “நமக்கு இந்த நாத்தம் ஒத்துவராது” என்கிற சூழ்நிலையில் தான் வளர்ந்தேன், மலர்ந்தேன், பெரியவனானேன்.

பல நேரங்களில் “அய்யரு பையன் நண்டு புடிக்கிறமாதிரி” என்கிற உவமைகள், கிண்டல்கள் என்னைப் பாடாய்ப் படுத்தியதுமுண்டு.

“மீன் பிடிப்பது என்ன, அவ்வளவு கஷ்டமாடா?” என்கிற சாகச உணர்வில் நானும் சில மீன்களை என் நண்பர்களுக்குப் பிடித்துக் காண்பித்ததுண்டு. ஆனால் அவற்றைக் கொல்ல மனமில்லாமல் தண்ணீரில் திரும்பவும் விட்டுவிடுவேன். ஒற்றைக் கண்ணால் அவை என்னைப் பாவமாய்ப் பார்க்கும். பார்த்தவுடன் “சேச்சே, இவற்றைக் கொல்லக் கூடாது” என்கிற மனோபாவமே என்னுள் ஓங்கி ஒலிக்கும். கையில் பிடித்த கெண்டைக் குஞ்சுகளும், விறால்களும் பீறிட்டுத் தண்ணீரில் ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்லாமல் மறையும்.

பெரியவனாகி, உலகம் சுற்றும் வாலிபனாக ஆனபிறகு, ’போட் கிளப்’ போன்ற பல கிளப்களிலும் ஒருசில பரம்பரை சைவ நண்பர்கள்கூட மீனை விரும்பி ஆர்டர் செய்வதைப் பார்த்து நான் அதிசயித்ததுண்டு. சென்னையிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த நண்பன் பின்னிரவு வேளையில் மீன் வேண்டுமென்று படாத பாடுபடுத்தி, நான் LAX பக்கமாக ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டுக்குப் போய் ‘ஃப்ரஷ் மீன்” என்று ஆர்டர் பண்ணி 78 டாலர் அழுத பாவம் இன்னமும் எனக்கு மறக்கவில்லை. என் மனைவிக்கும் மறக்கவில்லை.

எனக்குக் கத்திரிக்காய், பாவக்காய், உருளைக்கிழங்கும் பிடிக்கும். சில நண்பர்களுக்கு மீன், தேள், நண்டு என்று ஏதாவது பிடிக்கும். அதனாலெல்லாம் எங்களுக்குள் பேதம் ஏதும் வந்தது கிடையாது. நான் அதை ஒரு பெரிய விஷயமாகக் கருதி பேதம் வளர்த்தது கிடையவே கிடையாது.

ஆனால், இலங்கைப் பக்கமாக மீன் பிடிக்கப் போகும் இந்திய மீனவர்களை இலங்கை பாடாய்ப்படுத்தி சுட்டுக்கொல்லும்போது தான் இது என் நெஞ்சைச் சுட ஆரம்பித்தது.

மீனவர்களுக்கு வாழ்வாதாரமே மீன் பிடிப்பதுதான். பாக் ஜலசந்தி, இந்தியப் பெருங்கடல் என்று பல இடங்களிலும் அவர்கள் வலை விரித்து மீன் பிடித்து வந்து வாழ்வது, இன்று நேற்றல்ல, பன்னெடுங்காலமாகவே தொடர்வது. பரந்து விரிந்த நீர்ப்பரப்பில், தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் நிறைய மீன்கள் தேடி இலங்கை, கச்சத்தீவு என்று எங்காவது சென்று வலை விரிக்கலாம். வேண்டுமென்றே செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

அதற்காக, கருணாமூர்த்தி புத்தரின் வழித் தோன்றல்கள் துப்பாக்கியைக் கையில் எடுப்பதா? நிராயுதபாணிகளைக் கண்டபடி சுட்டுத் தள்ளுவதா?

புலிகளின் ஆதரவாளர்களென்று நினைத்தார்களோவென்றால் புலிகளின் கதையேதான் மாண்டு போன ஒரு இன வரலாறு ஆகிவிட்டதே!

உடைந்த படகும், ஓட்டை வலையும் மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுவரும் இந்திய, தமிழக ஓட்டாண்டிகளை இரக்கமே இல்லாமல் சுட்டுப் பொசுக்குவதா?

இலங்கையின் சைஸ் என்ன? இந்தியாவின் பலம் என்ன? நம் கடற்படை நினைத்தால் ஒரு அரை நாழிகையில் இலங்கையையே கபளீகரம் செய்து விடக்கூடிய வீரியமும், பராக்கிரமும் உள்ள சேனை அல்லவா நம் இந்திய கடற்படை? INS Vikrant என்ன, INS Vikramaditya என்ன, Submarine fleet என்ன, atombomb launchers என்ன, ICBM missiles என்ன?! இலங்கைக் கடற்படை ஒரு கொசுவினும் சிறியதல்லவோ?

நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்!

‘ரௌத்திரம் பழகு’ என்றானே பாரதி? இப்போது பழகாவிட்டால் பின்னெப்போது நாம் ரௌத்திரம் பழகுவோம்? எத்தனை பிணங்கள் விழவேண்டும் நம் ரௌத்திரம் சுடர் விட்டு எரிவதற்கு?

எனக்கு இந்த அரசியல் கணக்கு புரியவே இல்லை. தமிழக அரசும் மத்திய அரசும் ஏன் பயந்து நடுங்குகிறார்கள்?

இதென்ன கேவலமான அரசியல்? எப்படி இந்த நாதாரிகள் நிம்மதியாக இரவில் தூங்குகிறார்கள்?

எல்லை மீறி மும்பை புகுந்து பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான இந்திய சகோதரர்களை சுட்டுக்கொன்றாலும் “உன் தப்பை நீ தயவுசெய்து ஒத்துக்கொள்” என்று வருடக்கணக்கில் நாம் மன்றாடுகிறோமே தவிர, பதிலடி கொடுக்க நாம் ஏன் தயங்குகிறோம்?

’என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்?’ என்று பாரதி புலம்பியது எல்லாமே வேஸ்ட்தானோ?

என்று வரும் நமக்குக் கொஞ்சமாவது சொரணை?

4 comments:

RVS said...

//கருணாமூர்த்தி புத்தரின் வழித் தோன்றல்கள் //
ராவணன் வழித் தோன்றல்களோ.. (அவனுக்கு கூட பெண்ணாசைதானே.. !!! )
மொத்தம் எவ்ளோ ஒட்டுக்கள் தேறும் என்று சொன்னீர்கள் என்றால் கண்டுப்போம்.. சரியா..

MSATHIA said...

அட்டகாசமான கட்டுரை இராம்.

செல்வகுமார் said...

மீனவர் கொலை நடவடிக்கையில் அரசியல்வாதிக்கு எந்த ஆதாயமும் இல்லை. ஆதாயம் ஒன்றே அவர்களின் வீரம், காதல், நியாயமெல்லாம்.

Anonymous said...

இதில் சனியாளின் விருப்பம் தான் காங்கிரஸ் ஆட்சியின்,பிரதமரின் விருப்பம்..

சனியாளுக்கு, பிரபாகரனை ஆதரித்த எந்த ஒரு உயிரும் உலகில் வாழ்வதில் ஒப்புதல் இல்லை.

அதன் வெ(றி)ளிப்பாடுதான் 2009 மே'லிருந்து இன்று வரை நாம் பார்த்துக் கொண்டிருப்பது.

மாண்புமிகு அம்மாவுக்கு, தாத்தாவை மத்திய அரசிலிருந்தும் கூட்டணியிலிருந்தும் வெளிக் கொண்டு வருவதற்குத் தேவையான கோமாளித்தனம் செய்வதுதான் குறிக்கோள். இன்று தமிழர்களை, ஈழத்தமிழர்களை, பிரபாகரனை ஆதரிக்கலாம்.நாளை எதிர்க்கலாம்,ஒன்றும் கொள்கையில்லை.

கிழவனின் நோக்கம் தெள்ளத் தெளிவானது. குடும்பக் கொள்ளை, மாட்டாமல் இருப்பது, மாட்டினாலும் ஆதரவுக்கு ஆள் வைத்துக் கொள்வது.

இந்த மூக் கூட்டுக்குள் சிக்கி, ஈழத் தமிழர்கள் சீரழிந்து செத்தார்கள்.

இனி ராசீவைக் கொல்ல உண்மையில் திட்டமிட்டது யார், அதை புலிகளுக்குள் ஆதரித்தது யார் என்பது தெரிந்தாலும் பயனில்லை.

இனஃப் டாமேஜ் ஈஸ் டன் அல்ரெடி.

சாணக்யன்